ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் இல்லை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வுக்கு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசால்செயல்படுத்தப்படும், ரயில்வேதிட்டங்களுக்கு தேவையானநிலங்களை எடுப்பதில், மாநில அரசு காலதாமதம் செய்வதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

இதற்கு பதிலளித்து, தமிழக வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 2,443 ஹெக்டேர் நிலங்களை எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதில் தூத்துக்குடி- மதுரை (வழி- அருப்புக்கோட்டை) புதியஅகல ரயில்பாதை திட்டத்துக்கு937 ஹெக்டேர், திருவண்ணாமலை- திண்டிவனம் புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கு 276 ஹெக்டேர், ஈரோடு மாவட்டத்தில், கதிசக்தி பல்முனை மாதிரி சரக்குமுனையம் அமைக்க 13 ஹெக்டேர்என 1,226 ஹெக்டேர் நில எடுப்புக்கு தமிழக அரசால் நிர்வாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 ஆண்டுகளாக ரயில்வே துறை நிதி ஒதுக்காததாலும், நில எடுப்புக்கு ஒப்புதல் அளிக்காததாலும் பணிகள் முடங்கியுள்ளன. இதுதவிர, மீதமுள்ள 1,216 ஹெக்டேர் நிலங்களில் திண்டிவனம்- நகரி அகல ரயில் பாதை, திருவண்ணாமலை- திண்டிவனம் அகல ரயில்பாதை, மதுரை- தூத்துக்குடி அகல ரயில் பாதை, மணியாச்சி- நாகர்கோவில் அகல பாதை, திருவனந்தபுரம்- கன்னியாகுமரி அகல பாதை, தூத்துக்குடி- மதுரை (வழி- அருப்புக்கோட்டை) புதிய அகல பாதை, சின்னசேலம்- கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில் பாதை, மொரப்பூர்- தர்மபுரி புதியஅகல ரயில் பாதை, கொருக்குப்பேட்டை- எண்ணூர் 4-வது வழித்தடம் ஆகிய திட்டங்களுக்கு நிலம் எடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு - விழுப்புரம் அகல ரயில்பாதை, கதிசக்திபல்முனை மாதிரி சரக்கு முனையம், மயிலாடுதுறை- திருவாரூர்அகல ரயில்பாதை, பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு, மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரயில் பாதை, சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை மூன்றாவது, நான்காவது வழித்தடம் மற்றும் விழுப்புரம்- திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டங்களுக்கு என 907.33 ஹெக்டேர் அதாவது 74 சதவீதம் நில எடுப்பு பணிகள் முடிந்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள் நில எடுப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையிலான 4-வது வழிப்பதை அமைக்கும் திட்டத்தில், கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய நீர்வழிப் புறம்போக்கில் 2,875 ச.மீ. நிலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள இதர அரசு புறம்போக்கில் 383.5 ச.மீ. நிலங்களை ரயில்வேதுறைக்கு நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 1,823.87 ச.மீ. நிலத்துக்கு பாதுகாப்பு அமைச்சகத்திடமும் 278 ச.மீ. நிலத்துக்கு ரிசர்வ் வங்கியிடமும் ஒப்புதல் நிலுவையில் உள்ளது.

ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையிலான புதிய ரயில்தடம் அமைக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கும் என்பதால், இத்திட்டத்தை கைவிடும்படி பிரதமரிடம் முதல்வர் கோரினார். எனவே, ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளை தனிக்கவனம் செலுத்தி உரிய காலத்துக்குள் அவற்றை முடிக்கும் வகையில்தமிழக அரசு விரைந்து செயலாற்றி வரு கிறது. இவ்வாறுஅவர் பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE