போக்குவரத்து இடையூறாக இருந்த 816 வாகனங்கள் அகற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் பணி கடந்த 2023, செப்டம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் வடக்கு பகுதிகளில் 271 வாகனங்கள், மத்திய பகுதிகளில் 649 வாகனங்கள், தென் பகுதிகளில் 395 வாகனங்கள் என மொத்தம் 1,315 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் இதுவரை வாகன உரிமையாளர்களால் 338 வாகனங்கள், மாநகராட்சியால் 393 வாகனங்கள் என 731 வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் 85 வாகனங்கள் அகற்றப்பட்டு உள்ளன.

அந்தவகையில் மொத்தமாக இதுவரை 816 வாகனங்கள் அகற்றப்பட்டுவிட்டன. தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைவிடப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக அகற்றப்படும்.

மேலும் அகற்றப்பட்ட வாகனங்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதன்மீது காவல் துறை மூலம் பெறப்படும் தடையின்மைச் சான்று அடிப்படையில், இந்த வாகனங்கள் ஏலத்துக்கு விடப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான, கைவிடப்பட்ட வாகனங்களை உடனடியாக போக்குவரத்து இடையூறின்றி அகற்ற அறிவுறுத்தப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE