ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 29-க்கு தள்ளிவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஜூலை 29-க்கு தள்ளிவைத்துள்ளது.

பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக கைதான சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யூடியூப் சேனல் தலைமை நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்டுவையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பாக இன்று நடந்தது.

அப்போது ஃபெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “மனுதாரர் நூறு நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டுமென,” கோரிக்கை விடுத்தார்.காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம், அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் ஜூலை 29-க்கு தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE