சென்னையில் அந்தந்த தொகுதிகளின் எம்எல்ஏக்கள் மூலம் பொதுமக்களுக்கு பட்டா: அமைச்சர் உதயநிதி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 28,848 பட்டாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் மூலம் பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வருவாய்த் துறை,வீட்டு வசதி, குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள், சுகாதாரம், அறநிலையத் துறைகளின் அமைச்சர்கள் அடங்கிய 18 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஜூன் 13-ம் தேதி கூடி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது என்றும், ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்குவது, சிஎம்டிஏ மனைகளுக்கு பட்டா வழங்குவது மற்றும் அதில் உள்ள சிக்கல்கள்,தீர்வுகள் குறித்து விவாதித்தது.

இதன் அடிப்படையில், தொடர்புடைய துறைத் தலைவர்கள் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உரியஅறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 411, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அம்பத்தூர் திட்டப் பகுதியில் 516, நகர நிலவரித் திட்டத்தின் கீழ் மாதவரம் மற்றும் அம்பத்தூர் வட்டங்களில்5,070, ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின்கீழ் வரன்முறை செய்யப்பட்டதில் சோழிங்கநல்லூர் வட்டத்தில் 484, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருவொற்றியூர், மதுரவாயல் மற்றும் மாதவரம் வட்டங்களில் நத்தம் நில ஆவணங்களில் ரயத்துவாரி மனை என மாற்றம் செய்யப்பட்ட 19,114 பட்டாக்கள், நகர நில அளவை ஆவணங்களில் தனியார் நிலங்கள் சர்கார் நஞ்சை, புஞ்சை என பதிவாகியுள்ளதை சரி செய்து ரயத்துவாரி நஞ்சை, புஞ்சை என வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்ட 3,253 பட்டாக்கள், என மொத்தம் 28,848 பட்டாக்கள் தயார் செய்யப்பட்டன.

இந்நிலையில், நீலாங்கரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 1,986 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுகவும், திராவிட மாடல் அரசும் எப்போதும் மக்களுடன் நிற்கிறது. அதேபோல நீங்களும் எப்போதும் முதல்வருக்கும், அரசுக்கும் பக்கபலமாக இருக்கிறீர்கள். தமிழகத்திலேயே முதன்முதலாக கட்டிட அனுமதி ஆன்லைன் மூலமாக உடனடியாக பெறும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

வீடு எவ்வளவு முக்கியமோ, அதேஅளவு, அந்த வீட்டுக்கான பட்டாவும் மிகமிக முக்கியம். உங்கள் வீட்டுக்கானபட்டா என்பது உங்கள் ஒவ்வொருவருடைய உரிமை. அதனால்தான் பிரச்சினைகளை தீர்க்க குழு அமைத்து, அக்குழுவின் முயற்சியால் 28,848 பயனாளிகளுக்கு பட்டாக்கள் தயார் நிலையில் உள்ளன.

மாதவரத்தைத் தொடர்ந்து, தற்போது சோழிங்கநல்லூர் பகுதியில் பட்டாக்கள் வழங்கியுள்ளோம். சென்னையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தையும், தமிழக மக்களின் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போகின்ற வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை இந்தஅரசு செயல்படுத்தி வருகிறது. இந்தஅரசின் சாதனைகளில் ஒன்றாகத்தான் இன்று பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி திமுக செயலாளரும், சென்னை மாநகராட்சி 14-வது மண்டல குழு தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மண்டல குழு தலைவர்களில் ஒருவரான வி.ஏ.மதியழகன் வெள்ளி செங்கோல் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE