பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை: மத்திய பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் நலனுக்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஏழை மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்டை வழங்கிய பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வாழ்த்துகள்.

இந்த முன்னோக்கு பட்ஜெட், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிப்பதுடன், மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகிறேன்.

2030-ம் ஆண்டுக்குள் உலகின் 3–வது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறவும், 2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான, நிலையான தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கவும் இந்த பட்ஜெட் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE