தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மேலும், 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

நாளை (ஜூலை 25) முதல் வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

மன்னார்வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு, வடக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடலின் வடக்கு பகுதிகள், வடமேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள், மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE