மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ்: புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்வலியால் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை போலீஸார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள அவர், ஓராண்டுக்கு மேலாக சென்னை புழல் சிறையில் உள்ளார். அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நீதிமன்றக் காவல் 48-வது முறையாக சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி மதியம் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், புழல் சிறையில் இருந்து அவரை போலீஸார் அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்தனர். 3 நாள் சிகிச்சையில் உடல்நிலை சீரானதை தொடர்ந்து, நேற்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை போலீஸார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE