“கடந்த 10 ஆண்டுகளாக செய்ததை தொடர்வார்கள்” - பட்ஜெட் குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தச் சூழலில் இது குறித்து தனது கருத்தை திமுக-வின் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

“கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்ததோ அதை அப்படியே இந்த முறையும் தொடரும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். ஆனால், இதற்கு முன்னர் அவர் தாக்கல் செய்த ஆறு பட்ஜெட்டில் அவர் அளித்திருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இதுவரை நிறைவேறாமல் உள்ளது.

அவர்களது பட்ஜெட் தேசத்தில் உள்ள சில பணம் படைத்த செல்வந்தர்களுக்கானதாக உள்ளது. அது ஏழை மக்களுக்கானதாக ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களை சார்ந்த மக்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நடுத்தர மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதனை என்எஸ்எஸ்ஓ உறுதி செய்துள்ளது. விலை உயர்வால் அவர்களால் எதுவும் வாங்க முடியவில்லை.

ஆனால், பணம் படைத்தவர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளது. தொழிலில் தோல்வியடைந்த செல்வந்தர்களை ஆதரிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. அதற்காகத்தான் இந்த பட்ஜெட்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE