ஜூலை 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 23) முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

ஜூலை 22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல் கூடலூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலா, கன்னியாகுமரியில் 2 செ.மீ., திருவண்ணாமலையில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE