மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த முடியாது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த முடியாது என மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் டான்டீ நிறுவனம் ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்க வந்தபோது மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்ற தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில், "மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தென்காசி, நெல்லை, கேரள மற்றும் அசாம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மாஞ்சோலை தேயிலை தேட்டத்தை அரசால் ஏற்று நடத்த முடியாது" எனக் கூறப்பட்டது. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், "மாஞ்சோலை பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க குத்தகைக்கு விடுவதற்கு முன்பிருந்த நிலைக்கு மாஞ்சோலையை கொண்டுவர வேண்டியது அவசியம்.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கினால் அதே சலுகையை அரசு ரப்பர் கழகம் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் கோரினால் மேற்கு தொடர்ச்சி மலையின் பழமையான வனப் பகுதியை இழக்க வேண்டியது வரும். இதனால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை டான்டீ நிறுவனத்துக்கு வழங்க முடியாது" எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, டான்டீ நிர்வாகம், பிபிடிசி நிர்வாகம் இணைந்து 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE