எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீண் ஆகியோரை சிபிசிஐடி இரண்டு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் கொடுத்து நில பத்திரப் பதிவு மேற்கொண்டதாக அளித்த புகாரில், 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த மாதம் 12-ம் தேதி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

இந்நிலையில், இவ்வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரஷகாஷ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் ஆகிய 3 பேர் உள்ளிட்ட 13 பேர் மீது ஆள் கடத்தல், நில மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த மாதம் 14-ம் தேதி கரூர் நகர காவல் நிலையம், எஸ்.பி. அலுவலக த்தில் புகார் அளித்தார். இப்புகார்களின் பேரில் வாங்கல் காவல் நிலையத்தில் விஜயபாஸ்கர், அவர் சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு கடந்த மாதம் 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விஜயபாஸ்கரை கைது செய்வதற்காக சிபிசிஐடி போலீஸார் அவரை தேடி வந்தனர். தந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி விஜயபாஸ்கர், அவர் சகோதரர் சேகர் ஆகியோர் மீண்டும் முன் ஜாமீன் கோரி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி தாக்கல் செய்த மனு ஜூலை 6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மற்றும் அவரது வீடு, நிறுவனங்களில் கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை செய்தனர். மேலும் விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். மேலும் பலரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீண் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கேரளா மாநிலம் திருச்சூரில் ஜூலை 16ம் தேதி கைது செய்து கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையிலும், பிரவீணை குளித்தலை கிளை சிறையிலும் அடைத்தனர்.

நில மோசடிக்கு உதவிடும் வகையில் உண்மை ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என நான் ‘ட்ரேஷிங் சான்றிதழ்’ வழங்கிய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிருதிவிராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மத்திய சிறையில் இருந்த விஜயபாஸ்கர் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கடந்த 19-ம் தேதி விஜயபாஸ்கர், பிரவீண் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விஜயபாஸ்கரை சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு இன்று (ஜூலை 22) கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் விஜயபாஸ்கர், பிரவீண் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க 3 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி பரத்குமார் விஜயபாஸ்கர், பிரவீண் இருவரையும் 2 நாள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

விஜயபாஸ்கர் நீதிமன்றம் வருவதையடுத்து அதிமுக நிர்வாகிகள், அதிமுகவினர் நீதிமன்ற வ ளாகத்தில் திரண்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஃபைனான்சியர் அன்புநாதன், விஜயபாஸ்கரின் மகள் ஆகியோர் நீதிமன்றம் வந்திருந்தனர். கஸ்டடி வழங்கியதை அடுத்த விஜயபாஸ்கர், பிரவீண் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE