மதுரை: தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசிய வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவினர் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர், ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்தபோது உயிரிழந்தார். ராணுவ வீரரின் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார். விமான நிலையத்திலிருந்து அமைச்சர் திரும்பி செல்லும் போது அமைச்சர் சென்ற கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாஜக-வினரை கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜகவைச் சேர்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்பட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "தமிழக அமைச்சர் சென்ற தேசியக் கொடி பொருத்திய வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் விசாரணையை சந்திக்க வேண்டும். மனுதாரர்கள் தரப்பில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வந்தால் தியாகம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் கோருவதைப் போல நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது” என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.