கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் - சுகாதாரத்துறை

By செய்திப்பிரிவு

சென்னை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை போன்றவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.

அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன் படுத்த வேண்டும்.

கிணறுகள், குகைப்பகுதிகள், தோட்டங் கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதைபொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நோயாளிகளை பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும்.

ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து 48 மணி நேரத்துக்குள் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE