செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைசட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைசட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கு மேலாக சென்னை புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜிக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது நீதிமன்றக் காவல் 48-வது முறையாக சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், புழல் சிறையில் இருந்து அவரை போலீஸார் அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அவர் நெஞ்சுவலி அதிகமாக இருப்பதாக கூறியதால், அவரைபரிசோதனை செய்த மருத்துவர்கள் முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம்ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில்பாலாஜியை இன்று ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என கோரி செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE