கல்வராயன் மலையில் கள்ளச் சாராய அழிப்புப் பணிகள்: ஏடிஜிபி டேவிட்சன் ஆய்வு

By ந.முருகவேல் 


கல்வராயன்மலை: கல்வராயன் மலையில் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டிஐஜி தீஷா மிட்டல் ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்ப்பட்ட, மாடூர், மாதவச்சேரி, சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சேஷசமுத்திரம் ஆகிய கிராமங்களில் ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டதில் 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்வராயன்மலையில் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத்தில் தான் மெத்தலான் கலந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கல்வராயன்மலையில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக அகற்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிரடிப்படை காவல்துறையினர் கல்வராயன் மலையில் முகாமிட்டு தீவிர சாராய தேடல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சத்தியமங்கலம், பவானி, பண்ணாரி உள்ளிட்ட வனப்பகுதி முகாம்களில் பணிபுரிந்து வந்த தமிழக சிறப்பு அதிரடி படை வீரர்கள் சுமார் 50 மேற்பட்டோர் கல்வராயன் மலைக்கு பகுதியில் முகாமிட்டு கடந்த 25 நாட்களாக கல்வராயன் மலை பகுதியில் முகாமிட்டு ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் நேற்று முன் தினம் கடலூரில், 3 மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்திய கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க்,விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் மற்றும் கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி ஆகியோருடன் கல்வராயன்மலைப் பகுதியில் நடைபெறும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தனர் தொடர்ந்து கச்சராபாளையம் காவல் நிலையம், கரியாலூர் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை அடுத்து கல்வராயன்மலை அடர்ந்த வனப் பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வரும் இடங்களை கண்டறிந்தும்,கல்வராயன் மலையில் கள்ளச் சாராய வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை கடத்திக்கொண்டு நகரப்புறங்களுக்கு கொண்டு செல்லும் வழிகள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அதை தடுப்பதற்கான மேற்கொண்டுள்ள யுத்திகள் குறித்தும், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் நான்கு புறத்திலும் சோதனைச் சாவடிகளில் பிடிபட்ட கள்ளச் சாராய வியபாரிகள் பட்டியலையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு அதிவிரைவு படை போலீஸார் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை எழுத்தூர் . மேல்பாச்சேரி கொடமாத்தி. குரும்பலூர் கொட்டபுத்தூர். ஆராம்பூண்டி. வாரம் சிறுகாலூர் சேராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE