எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: இரு தரப்பினர் மீது வழக்குப் பதிவு

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் அண்மையில் விபத்து தொடர்பாக வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கை வழக்கறிஞர் விஜயகுமார் நடத்த ஆவணங்களை தயார் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் என்பவர், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு விபத்து வழக்குகளை இதுவரை, தான் எடுத்து நடத்தி வந்ததாகவும், அதனால், அந்த விபத்து வழக்கை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று விஜயகுமாரிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை செந்தில்நாதனுக்கு கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது திடீரென பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக் கொண்டனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த மோதலில் வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், விஜயகுமார், சக்திவேல், விமல் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் விஜயகுமார், செந்தில்நாதன், சக்திவேல், விமல் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE