மேட்டூர் நீர்வரத்து 40,018 கன அடியாக அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 55.12 அடியை எட்டியது

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 40,018 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.09 அடி உயர்ந்து, 55.12 அடியை எட்டியது

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 23,989 கன அடியாகவும், மாலையில் 31,102 கன அடியாகவும் உயர்ந்தது. தொடர்ந்து, நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில், நீர்வரத்து இன்று (ஜூலை 19) காலை விநாடிக்கு 40,018 கன அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் மட்டுமே நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே அதிகரித்து காணப்படும் நீர்வரத்தினால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 50.03 அடியில் இருந்த நிலையில் இன்று காலை 55.12 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 17.83 டிஎம்சியில் இருந்து 21.18 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5.09 அடியாகவும், நீர் இருப்பு 3.35 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொட்ர்ந்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி, உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதேபோல், கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் பரிசல் மற்றும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பண்ணவாடி பரிசல் துறையில் இருந்த தற்காலிக மீன் கடைகளையும் மீனவர்கள் அகற்றினர். அணை நீர் தேக்க பகுதியில் நிலத்தை உழுது பயிரிட்டு இருந்த விவசாயிகள் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பயிர்களை அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE