சென்னை | மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் சாகச பயணம்: பயணிகள் அச்சம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று காலை 8.15 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஏறினர். பிறகு,அவர்கள் ரயிலின் ஜன்னல்களின் பகுதிகளில் நின்றுகொண்டு, படிகளில் ஏறியும் கூச்சலிட்டு கொண்டும் பயணம் செய்தனர். தொடர்ந்து கல்லூரி பெயரை கூறி சத்தமிட்டபடி வந்தனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறும் போது, ‘‘மின்சார ரயிலில் படிக்கட்டு ஓரம், ஜன்னலில் தொங்கியபடியும், மேற்கூரையில் ஏறியும் சில மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டு கொண்டு பயணம் செய்தனர். இந்த செயல், பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

இது குறித்து ரயில்வே போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘ரயில் பயணத்தின்போது சக பயணியருக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து விதிமீறல்கள், வன்முறையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE