மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்வு

By த.சக்திவேல்

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

இதனிடையே, அங்கு அணைகளின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 5,054 கன அடியாகவும், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 16,577 கன அடியாகவும் உயர்ந்தது. தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவானது விநாடிக்கு 20,910 கன அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று 43.83 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 46.80 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், நீர் இருப்பு 14.14 டிஎம்சியில் இருந்து 15.85 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு உயர்ந்தது. நீர் இருப்பு 1.71 டிஎம்சி உயர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE