அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது: நில மோசடி புகாரில் சிபிசிஐடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் நேற்று கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட 7 பேர் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர் கடந்த மாதம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்குசிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் எனக் கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலை மறைவானார்.

இதற்கிடையே, ரூ.100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் மிரட்டி பத்திரப் பதிவு செய்துள்ளதாக, சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், வாங்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். இதன்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த சூழலில், கரூர், சென்னையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்கள் ஏற்கெனவே 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பின்னர், அவர்களை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடிஅலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சிபிசிஐடி அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால், போலீஸாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் அங்குபரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சுமார் 7 மணி நேர விசாரணைக் குப் பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் விஜயபாஸ்கரை மருத்துவப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE