40-க்கு 40 வெற்றி வழங்கிய மக்களுக்கான பரிசுதான் மின்கட்டண உயர்வு: வானதி சீனிவாசன்

By இல.ராஜகோபால்

கோவை: மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வெற்றி வழங்கிய மக்களுக்கு திமுக அரசு வழங்கியுள்ள பரிசாக மின்கட்டண உயர்வு அமைந்துள்ளது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ, வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "மக்களவை தேர்தலில் தி.மு.க-வினருக்கு 40 எம்.பி-க்களை வழங்கிய மக்களுக்கு, அவர்கள் பரிசாக மின்கட்டண உயர்வை கொடுத்துள்ளனர். இந்த மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே, மின்கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலனை செய்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும். தமிழக அரசுதான் இந்தியாவிலே அதிகமாக கடன் வாங்கியுள்ளது. தவிர பல மடங்கு வரி உயர்வும் தமிழகத்தில் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடரும் படுகொலைகள் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. அரசியல் கட்சியினருக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. முதல்வர் கூறுவது போல் தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. காவிரி விவாகரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினால் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு கேட்காதா? இண்டியா கூட்டணியில் அதிக எம்.பி-க்களை வைத்துள்ள தி.மு.க, காவிரி விவாகரத்தில் காங்கிரஸ் அரசுடன் ஏன் பேச்சு நடத்தவில்லை. கூட்டணி தர்மம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும் தான்" என வானதி சீனிவாசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE