பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் நீலகிரி மாவட்ட நீதிபதி உயிரிழப்பு

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். சொந்த வேலை காரணமாக சின்னாம்பாளையம் வந்தவர் இன்று மதியம் பொள்ளாச்சி - உடுமலை சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சாலையை கடந்து அங்குள்ள மளிகை கடைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது மோதியது. அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நீதிபதி கருணாநிதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார் உயிரிழந்த நீதிபதி கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி யார் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE