மேட்டூர் அணை நீர்வரத்து 5,054 கன அடியில் இருந்து 16,577 கன அடியாக அதிகரிப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 5,054 கன அடியில் இருந்து 16,577 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கர்நாடக மாநில அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கடந்த 12ம் தேதி முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கான நீர்வரத்து கடந்த 13ம் தேதி 3,191 கன அடியாகவும், 14ம் தேதி 4,013 கன அடியாகவும் இருந்தது.

இது நேற்று 4,047 கன அடியாகவும், இன்று காலை 8 மணி நிலவரப்படி 5,054 கன அடியாகவும் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென நீர்வரத்து அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவானது விநாடிக்கு 16,577 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே, காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 43.22 அடியில் இருந்து 44.62 அடியாகவும், நீர் இருப்பு 13.08 டிஎம்சியில் இருந்து 14.59 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ள நிலையில் பிலிகுண்டுலு பகுதியில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE