விடுமுறை கோரி வீடியோ வெளியிட்ட ஆயுதப்படை காவலர் பணி நீக்கம் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: விடுப்பு கோரி வீடியோ வெளியிட்டதற்காக ஆயுதப்படை காவலரை பணியிலிருந்த நீக்கி டிஜிபி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இவர் மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நான் மதுரையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தேன். கடந்த 2021-ல் கரோனா காலகட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பணிக்கு வந்ததை கண்டித்த காவல் ஆய்வாளர், விடுமுறை நாளில் வேலை பார்த்ததற்கு ஈடுகட்டும் விடுப்பு கோரி ஆய்வாளரிடம் விவாதம் செய்ததாகவும், ஈடுகட்டும் விடுப்பு கோரி முதல்வருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டதாகவும் என் மீது குற்றச்சாட்டினார்.

இதற்காக எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டேன். என்னை பணி நீக்கம் செய்து டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியாகவுரி விசாரித்தார். அரசு தரப்பில், “மனுதாரருக்கு துறைரீதியான தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதி இன்றி விடுப்பு எடுத்தது, விடுப்பை நீட்டித்தது, காவல்துறை நடத்தை விதிகளுக்கு முரணாக தாடி வைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மனுதாரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் விடுப்புக் கோரி பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இருப்பினும் மனுதாரரின் விதிமீறல் செயலுக்காக அவருக்கு அதிபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

மனுதாரர் ஆயுதப்படையில் பணியாற்றியவர் என்பதால் அவரிடமிருந்து அதிகபட்ச ஒழுக்கமும் நேர்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் அவரை பணியில் இருந்து நீக்கியது ஏற்க முடியாது. மனுதாரரின் இள வயதைக் கருத்தில் கொண்டு அவரை பணியில் இருந்து நீக்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மதுரை ஆயுதப்படை உதவி ஆணையர் மனுதாரருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கி அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது, என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

ஆயுதப்படை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் தாடி வைத்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 2 வருட ஊதிய உயர்வு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கில், ‘காவல்துறையில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் தாடி வைக்கத் தடையில்லை’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE