தருமபுரி சாலை விபத்து: காயமடைந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்று (15.07.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 21 நபர்கள் பலத்த காயமடைந்ததோடு இவ்விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE