கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு அடிப்படையில் மேலும் 1.48 லட்சம் பேருக்கு ரூ.1,000

By செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல் முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த, கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்றும் பெயரிட்டார்.

இதையடுத்து, உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்த வழிமுறைகளை பின்பற்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில், தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள 19,487 இலங்கை தமிழர்களின் குடும்பத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளும் இணைக்கப்பட்டனர்.

1.15 கோடி பயனாளிகள்: இத்திட்டத்தை பொருத்தவரை, கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.8,123.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த 2024-25-ம் ஆண்டுக்கு ரூ.13,722.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை, முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 14,723 மகளிர் உட்பட 1 கோடியே 15 லட்சத்து 27,172 மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.

விண்ணப்பங்கள் ஏற்பு: இதற்கிடையே, முன்னதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய, காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அவ்வாறு மேல் முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களுக்கும் இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் 15-ம் தேதி வழக்கமாக உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE