மக்களை வதைக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக: இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. “தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு என் கடும் கண்டனம். பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த அரசுக்கு? ‘சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்’ என்று மேடைதோறும் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை. சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்து கொண்டே இருக்கிறீர்கள்.

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது, மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி,
மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற முதல்வரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE