கிருஷ்ணகிரியில் சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு: பழைய கட்டிடத்தை இடித்தபோது சம்பவம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே உள்ள எம்சி பள்ளியில் ஊருக்கு பொதுவான இடத்தில் பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழமையான கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று (ஜூலை 15) நடந்தது. இப்பணியில் எம்சி பள்ளி காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் அண்ணாமலை (65) மற்றும் ரவி (51) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இன்று மாலை கட்டிடத்தின் அடிப்பகுதியில் கடப்பாரையால் குத்தி இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் பழமையான சுவர் இடிந்து அண்ணாமலை, ரவி ஆகியோர் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் இருவரும் சிக்கினர்.

அங்கிருந்தவர்கள் மீட்பதற்குள் அண்ணாமலை, ரவி உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த, மகாராஜாகடை போலீஸார் 2 பேரின் சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து எஸ்பி தங்கதுரை விசாரணை நடத்தினர். விபத்து குறித்து போலீஸார் கூறும்போது, “பழமையான கட்டிடத்தின் அடிப்பகுதியில் கடப்பாரையால் குத்தி இடிக்கும் போது சுவர் எதிர்திசையில் விழுந்ததில் 2 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தது உயிரிழந்தனர்,” என்று தெரிவித்தனர். இதுகுறித்து மகாராஜகடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE