தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் கடந்த ஜூன்10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட நடப்புகல்வியாண்டுக்கான (2024-25)வருடாந்திர நாட்காட்டியில் 220தினங்கள் பள்ளி வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பணிச் சுமையை குறைக்கும் வகையில் வேலைநாட்களைக் குறைக்க வேண்டுமென பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அதையேற்று பள்ளி வேலைநாளாக இருந்த இன்று (ஜூலை 13) அனைத்துவித பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற சனிக்கிழமைகள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், சூழலுக்கேற்ப வேலைநாட்களைக் குறைப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE