நாங்குநேரி பருத்திப்பட்டு கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: நாங்குநேரி பருத்திப்பட்டு கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு புகார் தொடர்பான சமாதானக் கூட்ட முடிவுகளை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பருத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாங்குநேரி அடுத்த பருத்திப்பட்டு கிராமத்தில் சுந்தராட்சி அம்மன் கோயில் திருவிழா ஜூலை 22 முதல் 24 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பால்குடம், கும்பம், சாமி சப்பர ஊர்வலம் உயர் சாதியினர் வசிக்கும் தெருக்கள் வழியாக மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்வதில்லை. கோயில் திருவிழாவில் உயர் சாதியினர், ஆதிதிராவிட வகுப்பினரை சாதிய பாகுபாட்டுடன் நடத்துகின்றனர். எனவே, கோயில் திருவிழாவில் அனைத்து சாதியினருக்கும் சம வழிபாட்டு உரிமை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “சாதிய பாகுபாடு புகார் அடிப்படையில் சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டு சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதி பாகுபாடு இல்லாமல் திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே சுமுகமாக கோயில் திருவிழாக்களை நடத்த முடியும். மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாமல் அதிகாரிகள் தலையிட்டு எவ்வாறு திருவிழாவை நடத்த முடியும்? சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தடியடி, துப்பாக்கிச் சூடு அளவுக்கு நிலை போகும். எனவே, கோட்டாட்சியர் நடத்தும் சமாதானக் கூட்டத்தின் முழு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE