சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர்.மகாதேவனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா பணி ஓய்வு பெற்றதையடுத்து, மூத்த நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான கோடீஸ்வரர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியகாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குப்பிறகு இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவர்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர்.மகாதேவன் கடந்த 1963-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதியன்று பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர். மகாதேவன், தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க, பழமையான கோயில்கள், புராதன சின்னங்கள், கோயில் நகைகள் பாதுகாப்பு, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் 75 கட்டளைகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE