50 ஆண்டு தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் டிஜிட்டல் மயமாகின்றன: மக்கள் விரைவில் பார்வையிடலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் அனைத்து துறைகளின் கோப்புகள், செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாறிவருகின்றன. அந்த வகையில், சட்டப்பேரவையின் செயல்பாடுகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் கூறியதாவது:

சட்டப்பேரவையில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகள், முக்கியமான விவாதங்கள் என அனைத்தும் தற்போது பேரவை நூலகத்தில் புத்தக வடிவில் உள்ளது. மக்கள் பார்வையிடும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக இது தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பிட்ட ஒரு வார்த்தையை அதாவது கருணாநிதி, ஜெயலலிதா என பெயரை பதிவிட்டால், அவர்கள் பேசிய அனைத்தும் வரும். காவிரி, கச்சத்தீவு என முக்கிய நிகழ்வுகளை பதிவிட்டால் அதுதொடர்பான விவாதங்கள், நிகழ்வுகள் அனைத்தும் வரும். இப்பணிகள் முடிந்ததும் விரைவில் முதல்வர் தொடங்கி வைப்பார். தேசிய அளவிலான இ-விதான் இணையதளத்திலும், பேரவை நிகழ்ச்சி நிரல், கொள்கை விளக்க குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, கருணாநிதி நூற்றாண்டு தொடர்பாக சட்டப்பேரவை செயலகம் தயாரித்துள்ள நூலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE