சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்ற உலக மக்கள்தொகை தினவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணை மேயர் மு.மகேஷ்குமார் பரிசு வழங்கி கவுரவித்தார்.
பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 11-ம் தேதியை`உலக மக்கள் தொகை தினம்' என அறிவித்துள்ளது. இந்த நாள் ஆண்டுதோறும் உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறை சார்பில் உலக மக்கள் தொகைதின விழிப்புணர்வு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மு.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடும்ப நல உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவியருக்கு துணை மேயர் மகேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். மாநகராட்சிப் பகுதிகளில் குடும்ப நலக் கட்டுப்பாட்டு முறைகள் (தற்காலிக மற்றும் நிரந்தர) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுகாதாரம், கல்வி மற்றும் தகவல்தொடர்பு விழிப்புணர்வு வாகனத்தை துணை மேயர் மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சி சார்பில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாமும் நேற்று தொடங்கப்பட்டது.
இது வரும் ஜூலை24-ம் தேதி வரை மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் 3 அவசரகால மகப்பேறு மருத்துவமனைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எஸ்.பானுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.