புதுச்சேரி சாராயக் கடைகளில் சாராயத்தின் வீரியத்தை ஆய்வு செய்ய தனிப்படை!

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி சாராயக் கடைகளில் விற்கும் சாராயத்தின் வீரியத்தை ஆய்வு செய்ய தனிப்படைகளை கலால் துறை அமைத்துள்ளது. தனி நபருக்கு அதிகளவு சாராயம் விற்றால் கலால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி திருக்கனூரில் இருந்து சாராயம் வாங்கிச் சென்று குடித்ததில் விழுப்புரத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சாராயக் கடைகளில் விற்கப்படும் சாராயம் தொடர்பாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-வான அங்காளன் டிஜிபி-யிடம் புகார் தந்தார்.

இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ், “சமீப காலமாக புதுச்சேரியை ஒட்டிய தமிழக பகுதியில் சிலர் புதுவையில் இருந்து வாங்கிச் சென்ற மதுவை அருந்தி உடல் நிலை பாதிக்கப்பட்டு தமிழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் செய்தித் தாள்களிலும் மற்றும் ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளது.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாராயக் கடைகளில் புதுச்சேரி அரசின் வடி சாராய ஆலையில் இருந்து வழங்கப்பட்ட சாராயம் மட்டுமே விற்கப்படுகிறதா என்று கண்காணிக்கவும் மேலும் அதன் வீரியத்தை ஆய்வு செய்யவும் மற்றும் சாராயத்தில் வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கவும் கலால் ஆணையரின் உத்தரவுப்படி தாசில்தார் சிலம்பரசன், ஆய்வாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகூர், நெட்டப்பாக்கம் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பகுதிகளில் உள்ள சாராயக் கடைகளில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி சாராய பாக்கெட்டுகள் மூலம் தமிழக பகுதிகளுக்கு கள்ளத்தனமாக எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தனி நபருக்கு சாராயம் விற்பனை செய்யக் கூடாது என்றும் சாராயக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்டம் 1970-ன் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE