விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சிறிது நேரம் பாதிப்பு

By எம். வேல்சங்கர்

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகர் - விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை மாலை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.

சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான வழித்தடம், சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நேரங்களில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், விம்கோநகர் - விமான நிலையம் நீல வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே புதன்கிழமை மாலை 5.55 மணி அளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் சென்ட்ரல் - விமான நிலையம் வரையிலான தடத்தில் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், சென்ட்ரல் - பரங்கிமலை பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல மெட்ரோ ரயில்கள் இயங்கின. இதற்கிடையில், விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான நீல வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கின. மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால், பயணிகள் சிறிது நேரம் சிரமத்தை சந்தித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE