உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு: இத்தலாரில் 36 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை எதிர்த்து இத்தலாரில் இன்று 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகை தற்போது நகராட்சி அந்தஸ்தில் உள்ளது. இங்கு 36 வார்டுகள் உள்ளன. 1987 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வரும் உதகையின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர் ஆகும். 2010-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 பேர் இங்கு வசித்தனர். தற்போது உதகை நகராட்சியில், 1.25 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு 3,500 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன.

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் உதகைக்கு வருகின்றனர். இதனால் இந்திய அளவிலும் உலக அளவிலும் உதகை பிரசித்தி பெற்றுள்ளது.

உதகை நகராட்சி 1866-ம் ஆண்டில் உருவானது. இதை எல்லையை விரிவாக்கம் செய்து, நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் அதிக அளவில் அரசு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று உதகை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆணையாளர் ஏகராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. இதன்படி உதகை நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி மற்றும் இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு, கேத்தி உள்ளிட்ட மேற்கண்ட அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்கண்ட கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாக்குபெட்டா படுகர் நல அமைப்பு சார்பில் நடந்த முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், உதகை நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், உதகை மாநகராட்சி எல்லைக்குள் தங்கள் பகுதிகளை இணைக்க கிராமப் பகுதிகளில் கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இது தொடர்பாக நாக்கு பெட்டா படுகர் சங்கத்தினர் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாக்குபெட்டா நலச்சங்கத்தினர் இந்த முடிவை எதிர்த்து சட்ட ரீதியாக போராடவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள் உதகை நகராட்சியின் மாநகராட்சி விரிவாக்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள், இத்தலாரில் கடைகளை அடைத்து, அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தலார் பஜார் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் ஹாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர் எமரால்டு மணி, கல்லக்கொரை போஜனம், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, மாநகராட்சியாக மாறினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உதகை நகராட்சியுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைப்பது தொடர்பாக கிராம மக்களுடன் எந்தவித கருத்தும் கேட்காமல் பரிந்துரை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. உதகை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும் போது வரி இரட்டிப்பாகிறது.

மாநகராட்சியாக மாற்றுவதற்குத் தேவையான அளவு இங்கு மக்கள் தொகையோ தொழில் நிறுவனங்களோ இல்லை. மேலும், வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியாக உதகை உள்ளது. எங்கள் கிராமங்களை மாகராட்சி எல்லைக்குள் கொண்டு சென்றால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும். கிராம பஞ்சாயத்திற்கு வழங்கப்படும் இலவச குடிநீர் கிடைக்காது. எனவே, உதகை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தை கைவிடாவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE