மா.கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைந்த துயரச் செய்தியறிந்து, பாலகிருஷ்ணன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். ராதாகிருஷ்ணனின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்: "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ராதாகிருஷ்ணன் (66) நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சிதம்பரம் அண்ணாமலை நகர், திடல் வெளிப்பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த கே.ராதாகிருஷ்ணன் டீசல் ஒர்க்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்பட்ட அவரது மறைவு வேதனை அளிக்கிறது.

கே.ராதாகிருஷ்ணனுக்கு சங்கவி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். கே.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது சகோதாரர் கே.பாலகிருஷ்ணன், மனைவி சங்கவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE