திருத்தணியில் பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி தனது தாத்தாவோடு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த 4 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கே.கே. நகரைச் சேர்ந்தவர் திருக்குமரன் (40). சென்னையில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர். இவரது மனைவி பப்பிதா (35), ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் திட்ட அதிகாரியாக பணிபுரிகிறார்.
இவர்களது 4 வயது மகள், திருத்தணி அடுத்த முருகம்பட்டுவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யூ.கே.ஜி., படித்துவருகிறாள். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 3.45 மணியளவில் அந்த சிறுமி, திருத்தணி-சித்தூர் சாலையில் பொதுப்பணித் துறை அலுவலகம் பின்புறம் உள்ள பள்ளி வாகனம் நிற்கும் இடத்தில் பள்ளி பேருந்தில் இருந்து இறங்கினாள். அங்கு தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல காத்திருந்த தன் தாத்தா சீனிவாசலுவுடன்(70) சிறுமி நடந்துச் சென்றாள்.
அப்போது சீனிவாசலு, சிறுமியின் புத்தக பையை சுமந்து முன்னே செல்ல, அவரை பின் தொடர்ந்து சென்ற சிறுமி திடீரென மாயமானாள். தாத்தாவோடு சென்ற சிறுமி மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்தணி போலீஸார், மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். சீனிவாசலு, சிறுமியின் புத்தக பையை சுமந்து முன்னே செல்ல, அவரை பின் தொடர்ந்து சென்ற சிறுமி திடீரென மாயமானாள். அவரை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.