ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பா? - விசாரணை வளையத்தை விரிவுபடுத்தும் காவல் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர். தொடர்ந்து, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39) மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உண்மை நிலை வெளியே வரவேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாற்ற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிற மாவட்ட கூலிப் படைகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

அதேபோல், சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதாவது, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன், சிறையில் வைத்தே கொலை திட்டத்தை ஆற்காடு சுரேஷின் தம்பிக்கு வகுத்து கொடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர் அதைஅடிப்படையாக வைத்தும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE