அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான வழக்குகளை எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா முன்னாள் டிஜிபி-யான ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகையையும் சிபிஐ தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வளவன் முன்பாக இன்று (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணையை சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE