எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் சோதனை: ரூ.100 கோடி நில மோசடி புகாரில் சிபிசிஐடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கரூர் / சென்னை: கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 5 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக 7 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார் பதிவாளர்(பொ) முகமது அப்துல்காதர் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த ஜூன் 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

13 பேர் மீது வழக்கு பதிவு: பின்னர், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தந்தையை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டிஇருப்பதால், தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என கேட்டு அவர் மீண்டும் தாக்கல் செய்த மனு கடந்த6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம்பெற்றவர்களான, விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் மணல்மேடு தாளப்பட்டி யுவராஜ், தோட்டக்குறிச்சி செல்வராஜ், கவுண்டம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் ஆண்டாங்கோவில் என்எஸ்ஆர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, ரெயின்போ நகர் பகுதியில் உள்ள விசைத்தறி கூடம், கரூர் திருவிக சாலையில் உள்ள எம்ஆர்வி அறக்கட்டளை அலுவலகம், பெட்ரோல் பங்க், என்எஸ்ஆர் நகரில் உள்ள அவரது ஆதரவாளர் ராஜேந்திரன் வீடு ஆகிய 5 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை 8 மணி நேரம் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின்போது, விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ஒரு பென்-டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

ரெயின்போ நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் வீடு,செங்குந்தபுரத்தில் உள்ள முன்னாள் நேர்முக உதவியாளர் கார்த்திவீடு ஆகிய 2 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்த சென்றனர். வீடு பூட்டியிருந்ததால், அங்கு சோதனை நடத்தவில்லை.

சென்னையில் சோதனை: சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுந்தரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் நேற்று காலை 7.15 மணிஅளவில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர், அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE