அமீபா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை: கேரள உயிரிழப்பை தொடர்ந்து பழனிசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கேரளாவில் பரவும் அமீபா நுண்ணுயிர் தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் அமீபாவால் ஏற்படும் மூளை தொற்று பாதிப்பால் கடந்த சில நாட்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் பய்யோலி பகுதியில் மேலும் ஒரு சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் இத்தகு பரவல்கள் ஏற்படாத வகையில், அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அசுத்தமான நீரின் மூலம் பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளது. எனவே, மக்களின் உயிரை காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE