ஆம்ஸ்ட்ராங் உடலை மாற்று இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

By செய்திப்பிரிவு

சென்னை: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ள கருத்தால் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யவும், அங்கு கல்லறையை எழுப்பவும் அனுமதி கோரிய ரிட் மனுவை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 7-ஆம் தேதி) சிறப்பு அமர்வு நடத்தியது.

ஆம்ஸ்ர்டாங்க் தரப்பு வழக்கறிஞர், “தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.?” என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு, “தேமுதிக அலுவலகம் பரந்த இடம்” என்று வாதிட்டது.

இதையடுத்து, கே.ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஏ.பொற்கொடி, தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி வி.பவானி சுப்பராயன், சென்னை மாநகராட்சி பரிந்துரைத்த மூன்று மாற்று இடங்களில் தற்போது உடலை அடக்கம் செய்யலாம் என பரிந்துரைத்தார். அதோடு, அப்பகுதியானது குறுகிய சாலையுடன் கூடிய குடியிருப்பு பகுதியில் உள்ளதால், கட்சி அலுவலக வளாகத்திற்குள் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.

கட்சி அலுவலக நிலத்தின் பரப்பளவு சுமார் 2,400 சதுர அடியில் மட்டுமே இருந்தது, அதில் ஒரு மேற்கட்டுமானம் ஏற்கனவே உள்ளது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசு தரப்பில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, 2000 சதுர அடி தர தயாராக இருக்கிறோம். இது குறித்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் கருத்தை பெற்று தெரிவியுங்கள்” என்றார்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE