மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,832 கன அடியாக அதிகரிப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 5 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து கடந்த 4-ம் தேதி 1,223 கன அடியாகவும், 5-ம் தேதி 1,281 கன அடியாகவும், நேற்று 1,465 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது, அணையின் நீர்மட்டம் 39.76 அடியில் இருந்து 40.05 அடியாகவும், நீர் இருப்பு 11.96 டிஎம்சியில் இருந்து 12.11 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ள நிலையில் பிலிகுண்டுலு பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE