கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சிபிசிஐடி சோதனை

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலி சான்றிதழ் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்தாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12ம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு பின் கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14ம் தேதி புகார் அளித்தார்.

இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது சிகிச்சையின்போது தான் உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் ஜூலை 1ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஸ்வரமூர் த்தி ஆகியோர் வீடுகளில் திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த சிபிசிஐடி இன் ஸ்பெக்டர்கள் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று முன்தினம் (ஜூலை 5ம் தேதி தாலுகா மற்றும் ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி மற்றும் வாங்கல் வழக்குகளில் தாக்கல் செய்திருந்த தலா இரு முன் ஜாமீன் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் கரூர் பெரியாண்டாங்கோவில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவரது சகோதரர் சேகர் வீடு, அவர்களது நெசவு தறிக்கூடம், பெட்ரோல் பங்க், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்னாள் நேர்முக உதவியார் கார்த்தி வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் 2 பேர், ஆய்வாளர்கள் 9 பேர் கொண்டு குழுவினர் இன்று (ஜூலை 7ம் தேதி) காலை 7 மணிக்கு முன்பிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE