விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (ஜூலை 8) மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

இதையடுத்து இத்தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 14-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட64 வேட்புமனுக்களில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், நாளை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8-ம் தேதி மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE