சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிர்ப்பலி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன.
இன்றைய விசாரணையில் 25-வது வழக்காக இது பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவேண்டும். அதனால் வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்” என முறையிட்டார்.
ஆனால், “வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை நடத்த வேண்டும். புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். விசாரணை வீணாகி விடும்” என, பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், “ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “ஒவ்வொரு ஆண்டும் கள்ளச் சாராய மரண சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதுசம்பந்தமான வழக்குகளில் தாமதமான விசாரணை காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். அதனால் விரைந்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 mins ago
இந்தியா
7 mins ago
இந்தியா
19 mins ago
சினிமா
22 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
59 mins ago
சுற்றுச்சூழல்
33 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago