தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் 76 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 2026 ஜனவரிக்குள் 19,260 ஆசிரியர் பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி மூலம் 17,595 பணியிடங்கள், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்கள் என 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு வளமான, அமைதியான அரசாக செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழகத்தை உருவாக்கவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். நமது மாணவர்களுக்கு தரமான பள்ளிக்கல்வி, உயர்கல்வியை அளிக்கிறோம்.

அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலம் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம்.

இதை மனதில் கொண்டுதான் ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின் றன. அடுத்த தேர்தலை அல்ல; அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பதுதான் திராவிட மாடல் அரசு. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (யுஎஸ்ஆர்பி), மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி), ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

65,483 பேருக்கு அரசுப் பணி: அதேபோல, உள்ளாட்சி அமைப் புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப் புகளில் 32,709 இளைஞர்கள் பணி நியமனம் பெற்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகள் மட்டுமின்றி, பெருந்தொழில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள் ளோம். அரசின் பல்வேறு முன்னெடுப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் கிடைத்த பெரும் முதலீடுகளாலும், லட்சக்கணக் கான வேலைவாய்ப்புகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் மூலம் பெறப்பட்டது. இந்த தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் 77,78,999 இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு, படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், இதுவரை, 3,06,459 பேருக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறையின் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 2,01,596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் முயற்சியால் 5,08,055 தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசுப் பணியை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் நலன் கருதி, 2026 ஜனவரி அதாவது, இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, டிஎன்பிஎஸ்சி மூலம் 17,595 பணியிடங்கள், டிஆர்பி மூலம் 19,260 ஆசிரியர் பணியிடங்கள், எம்ஆர்பி மூலம் 3,041 பணியிடங்கள், டிஎன்யுஎஸ்ஆர்பி மூலம் 6,688 பணியிடங்கள் என 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதுதவிர, சமூகநலம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கும் 30,219 பணியிடங்களும் நிரப்பப்படும். அந்த வகையில், 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் மொத்தமாக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை, காங்கிரஸ், பாமக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, கொமதேக, தவாக கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர்.

பாஜக சார்பில் வரவேற்று பேசிய வானதி சீனிவாசன், “பணி நியமனங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து தகுதியான பலர் காத்திருக்கின்றனர். அரசுப் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெறும்போது, அவர்களது நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

மேலும்