சென்னையில் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதைத் தடுக்க புதியதாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக 109 மற்றும் 112-வது வார்டுகளில் உள்ள 36 தெருக்களில் ரூ.24 கோடியில் பணிகள் நடைபெறுகிறது. இந்தப் பணிகளில் மிகவும் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் முதலாவதாக மனித நுழைவு வாயிலுக்குப் பதிலாக இயந்திர நுழைவுவாயில் (Machine Hole) அதிகபட்சமாக 12 அடி உயரத்தில் ரெடிமேடாக தெருக்களில் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்படுத்தப்படுகிறது. பின்னர் பொக்லைன் கொண்டு சுமார் 15 அடி ஆழம் வரை தோண்டி அங்கே இயந்திர நுழைவுவாயில் பதிக்கின்றனர். இதற்காக தெருவின் மையப் பகுதியில் பள்ளம் தோண்டும்போது எடுக்கப்படும் மண் இருபுறமும் கொட்டப்படுகிறது. அவற்றை உடனடியாக மூடாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து தடைபடுகிறது.
இதுகுறித்து திருவள்ளுவர்புரம் பகுதி மக்கள் கூறியதாவது: கழிவுநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டி இருபுறமும் மண்ணை கொட்டிவிடுவதால் நடந்து செல்ல சிரமமாக இருக்கிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அந்த இடத்தைக் கடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் அந்த வழியாகப் போகவே முடிவதில்லை.
இதனிடையே மழை பெய்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது. மண் சேறும் சகதியுமாகிவிடுவதால் வழுக்கிவிழும் அபாயம் ஏற்பட்டு நடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. அத்துடன் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருபுறமும் போதிய தடுப்புகள் வைப்பதில்லை. இரவில் ஒளிரும் சிவப்பு நிற ஸ்டிக்கரும் ஒட்டப்படுவதில்லை. பள்ளத்தை பக்கவாட்டில் மூடிய பிறகு இயந்திர நுழைவுவாயில் திறந்த நிலையிலேயே இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் மாதக்கணக்கில் நீடிக்கிறது. கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் மந்த கதியில் நடைபெறுகிறது. இதனால் 2 மாதங்களாக அவதிப்படுகிறோம். இப்பணியை விரைவாக முடித்து தார் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கு ஓராண்டு (2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை) டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அவ்வப்போது மழை பெய்வதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. தெரு ஓரங்களில் குடிநீர் குழாய், ஏற்கெனவே உள்ள கழிவுநீர் குழாய், மின்சார ஒயர்கள் செல்வதால் இப்பணியை இரவில் மேற்கொள்ள முடிவதில்லை. இருப்பினும், கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 mins ago
ஜோதிடம்
29 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago