சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவு இன்று (ஜூன் 19) பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், ‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. வங்கி ஆவணங்களை தரக்கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.
எனவே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும். நீதிமன்ற உத்தவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜூன் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 mins ago
ஜோதிடம்
28 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago